Sunday, October 12, 2008

நிலையான நினைவுகள்!

நினைவிருக்கா தோழியே!
பள்ளிப் பருவத்திலே
விடுமுறை என்றதுமே
விண்ணுக்கும் மண்ணுக்கும்
நாம்
தாவி குதித்தது..!

ரொட்டித் துண்டுகள்
தின்றபடி
குட்டிக் கதைகள்
பேசித் திரிந்தோம்...

தொண்டியிட்ட
கன்றுக் குட்டியை
கொடு போட
துரத்தித் திரிந்தோம்...

பிஞ்சு விட்ட
வெள்ளரிக் கொடியை
வரப்போரமாய்
தேடித் திரிந்தோம்...

கொத்தும் கிளியை
விரட்டி விட்டு
குஞ்சுக் கிளியை
பிடித்துத் திரிந்தோம்...

தீப் பெட்டிகளில்
நூலினைத்து
காது கொடுத்து
பேசித் திரிந்தோம்...

ஈர மணலை
கொட்டில் நிறைத்து
முட்டை என்றும்
தட்டித் திரிந்தோம்...

பருத்திப் பூவை
பறித்து வந்து
மாலை என்றும்
கட்டித் திரிந்தோம்...

நாம்
துள்ளிக் குதித்து
புள்ளி அமைத்த
பாதைகள்
இன்று
நட்பின்
வண்ணக் கோலங்களாய்..!

அதனால்தானே
உன் தொழியை எனக்கும்
என் நண்பனை உனக்குமாய்
வாழ்க்கைத்
துணையாக்கிக் கொண்டோம்..!

No comments: