Friday, September 26, 2008

புயலே...தென்றலாய் வா!

அடை மழைக்கு முன்
பெய்யும்
அழகான தூறல்...

புயலுக்கு முன்
வீசும்
புழுதி சேரா காற்று...

இடி ஓசைக்கு முன்
இமைக்கும்
இளம் மின்னல்...

கொந்தளிப்புக்கு முன்
குதூகலித்த
கடலின் சிறு அலை..!

தூறலும் தென்றலும்
மின்னலும்
அலைகளும்...
ஆழ் மனதை ஆட்கொள்ளும்..!

அழுத்தங்கள்
அடர்ந்துவிடின் அவையெல்லாம்
அழிந்து விடும்..
போராளியின் முன் புழக்க
பொற் குணங்களாய்..!

வேண்டும் மீண்டும்...
திரை கொண்ட
மறை முகத்தின்
முன் தோன்றிய மலர் முகங்கள்!

வேண்டும் மீண்டும்...
ஆயுதத்திற்கு முன்
அன்பை ஏந்திய
அழகான பூக்கரங்கள்!

வேண்டும் மீண்டும்...
சகதியாவதற்க்கு முன்
வீசிய
சந்தன வாசம்!

வேண்டும் வேண்டும்...
என்
மரணத்திற்கு முன்
இந்த மெல்லிய நேசம்..!

No comments: